வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை பணியாளர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்று (02.02.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப விமான பயணச் சீட்டை பெற்றுக் கொள்வதில் சிரமம் நிலவினால் அது குறித்து தேடிப் பார்த்து விமான பயணச்சீட்டுக்களை பெற்று அவர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
´வெளிநாடுகளில் தங்கியுள்ள பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு விமான பயணச்சீட்டுக்களை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதாவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு இலவசமாக விமான பயணச் சீட்டுக்களை பெற்று கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இலங்கைக்கு 1000 பணியாளர்களை அழைத்து தனிமைப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஆகவே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடவசதியை அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்´ என்றார்.