நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் படகுடன் மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கிய விபத்தில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க்ப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன், தனது அமைச்சின் கீழ் மற்றுமொரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் எதிர்வரும் சில தினங்களில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த சம்பவமானது, எதிர்பாராத விதமாக நடந்ததாக அவர் தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதனை நிறுத்திக்கொள்ளுமாறும் தமிழக மீனவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மீனவர்களின் சொத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சேதம் விளைவித்து வருவதாக கூறிய அவர், அதனை தடுப்பதற்காகவே இலங்கை கடற்படை நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை கடற்படையின் படகில் மோதுண்டு கடலில் மூழ்கி நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கொலை செய்துஇலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கொலை செய்துவிட்டதாக அவர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.