சீனாவில் ஹுஷான் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியவர்களில் 12 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி ஷாண்டோங் மாகாணத்தின் குய்சியா நகரத்திற்கு அருகிலுள்ள குறித்த சுரங்கத்தில் வழக்கம் போல தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.
இதனால் சுரங்கத்தின் நுழைவாயில் பகுதி இடிந்து சுரங்கத்துக்குள் இருந்த 22 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்து 30 மணி நேரத்துக்குப் பிறகே காவல்துறை மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் விபத்து நடந்து 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது.
சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர்.
இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், 12 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதேசமயம் மற்றைய தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.