மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேற்று (05) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30.12.2020 ஆம் திகதி கொழும்பில் இருந்து மன்னாருக்குச் சென்ற நிலையில், எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கொழும்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக காவல்துறை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதன்பின்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேற்று முன்தினம் (04.01.2021) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை அறிக்கை நேற்று கிடைக்கப் பெற்ற நிலையிலேயே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.