இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார்.
இந்த தனிமைப்படுத்தல் முடக்கம் தொடர்ந்து 5 நாட்களுக்கு அமுலில் இருக்குமென அவர் மேலும் அவர் தெரிவித்தார்.
நேற்று முழுநாளும் மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களுக்கும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைவாக தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ். மயூரன்இ மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல் கலந்துகொண்டனர்.