கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தில் பாரவூர்திச் சாரதி ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று (24.12.2020) மேலும் 55 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சாரதியின் குடும்பத்துடன் நேரத் தொடர்புகளை வைத்திருந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சாரதியின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவர் சுகயீனமடைந்துள்ளதால் அவரைப் பார்ப்பதற்குச் சென்றவர்களே சுகாதார மருத்துவ அதிகாரியினால் அடையாளப்படுத்தப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 54 குடும்பங்களும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன, என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.